குற்றம்

சென்னை: மசாஜ் சென்டரில் பட்டாக்கத்தியுடன் புகுந்து நகை, பணம், செல்போன்களை திருடிய கும்பல்

Veeramani

சென்னை வேளச்சேரி மசாஜ் சென்டரில் புகுந்த கும்பல், பட்டாக் கத்தியால் தாக்கி 5 சவரன் தங்க நகை, 30,000 ரூபாய் பணம், 7 செல்போன்களை பறித்து சென்ற சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கிரியேட்டிவ் சலூன் அண்ட் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடைபெற்று வருகிறது. இந்த மசாஜ் சென்டருக்கு வெள்ளை உடை அணிந்த நபருடன் 5 பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்தியுடன் வந்துள்ளனர். வந்த உடனேயே அவர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு ஸ்பா ஊழியரான அன்புரோஸ் பெர்னாண்டஸ் என்பவர் தரமறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கும்பல் தலையில் பட்டாக் கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்த 5  பெண்களின் கைப்பை, 30000 ரூபாய் பணம், 7 செல்போன்கள் மற்றும் 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஒரு பெண்ணின் நெற்றியில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் இருவரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

செல்வதற்கு முன்பாக அவர்கள் போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வேளச்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.