குற்றம்

சென்னை: மகனை கொலை செய்த நபர்களை பழிவாங்க காத்திருந்த தந்தை உட்பட 4 பேர் கைது

kaleelrahman

மகனை கொலை செய்த நபர்களை பழிவாங்க காத்திருந்த 4 நபர்களை கைது செய்த போலீசார், நாட்டுவெடிகுண்டு மற்றும் பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு மாநகர் அரசு மதுபான கடை அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி சரவணன் (25) என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் 4 நபர்களை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு வருவதாக நுண்ணறிவு பிரிவு போலீசார் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தகவலின் பேரில் மயிலாப்பூர் போலீசார் நொச்சி நகரில் வசித்து வரும் இறந்து போன சரவணனின் தந்தை முருகேசன், சகோதரர் முருகன், கார்த்திக் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இறந்து போன தனது மகனை கொலை செய்த நபர்கள் பிணையில் வெளிவந்தவுடன் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி வந்தது நிரூபணமானது. மேலும் கொலை செய்வதற்காக கண்ணகி நகரைச் சேர்ந்த சுனாமி சுரேஷிடம் நாட்டு வெடிகுண்டு மற்றும் செம்மெஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திக்கிடம் பட்டாக்கத்திகளை வாங்கி வைத்துள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து இவர்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 5 பட்டாக்கத்திகளை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரிடமும் மயிலாப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.