குற்றம்

சென்னை: வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஹெராயின் பறிமுதல் - சிறுவன் உட்பட 5 பேர் கைது

kaleelrahman

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார், சிறார் உட்பட வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணியில் வீட்டில் ஹெராயின் போதைப் பொருள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக சங்கர் நகர் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் நாகல்கேணியில் கட்டட மேஸ்திரியிடம் கொத்தனாராக வேலை செய்து கொண்டு, போதைப் பொருளை விற்பனை செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த அயூப் அலி (21), பாபு ஷேக் (28), ஆலம் ஷேக் (58), ராகுப் (21), மேலும் சிறார் ஒருவர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து 60 கிராம் ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2,40,000 இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரில் சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.