குற்றம்

சென்னை: குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணன் அடித்து கொலை – தம்பி கைது

Veeramani

சென்னையில் குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட அண்ணனை அடித்து கொன்ற தம்பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சிவராஜ்(47). இவரது தாய் தனலட்சுமி (67). குடிபோதைக்கு அடிமையான சிவராஜ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தாய் மற்றும் குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அவரது தம்பியிடமும் சிவராஜ் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிவராஜ் ரகளையில் ஈடுபட்டு உடல் நலம் பாதித்த தாயிடம் தகராறு செய்துள்ளார். கீழ் வீட்டில் இருந்த தம்பி பிரகாஷ் தாயுடன் தகராறு செய்யும் சத்தம் கேட்கவே மேலே சென்று அண்ணன் சிவராஜிடம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பிரகாஷும் மது போதையில் இருந்ததால் ஆத்திரமடைந்து சிவராஜை அருகிலிருந்த கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிவராஜ்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், இருவர் மீதும் குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.