குற்றம்

‘நானும் போலீஸ் தான்'- எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய காவலர் கைது

kaleelrahman

குடிபோதையில் 'நானும் போலீஸ் தான்' என உதவி ஆய்வாளரை மிரட்டி தாக்கிய காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், அவர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

இந்நிலையில் ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் கோயிலின் வாயிற் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு தனது நண்பருடன் வந்த பாலாஜி என்பவர் வரிசையில் நிற்காமல் வெளியே செல்லும் வழியில் உள்ளே செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இவர்களை தடுத்து நிறுத்தி வரிசையில் செல்லும்படி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாலாஜி, உதவி ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டதோடு “நானும் போலீஸ் தான்“ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார் . இதில் உதவி ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பாலாஜியை பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர், சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, பணியில் இருந்த உதவி ஆய்வாளரை தாக்கியதாக பாலாஜி மீது ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களை கொண்டு மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், குற்றம் கருதி மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.