குற்றம்

மகளுக்கு பாலியல் தொந்தரவு: கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி

kaleelrahman

சென்னையில் குடிபோதையில் பெற்ற மகளிடமே தகாத முறையில் நடக்க முயன்ற கணவனை, மனைவி சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி வாழையம்மா நகர் பகுதியைச சேர்ந்தவர் பிரதீப் (43). கூலி தொழிலாளியான இவருக்கு பிரீத்தா (41) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து அலறல் சத்தமும், அழுகை சத்தமும் கேட்கவே அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, பிரதீப் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில், அருகில் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் அழுது கொண்டிருந்ததை கண்டு பேசின் பிரிட.ஜ் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பிரதீப், மது போதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் மனைவி பிரீத்தா, வீட்டில் இருந்த சுத்தியலால் பிரதீப் தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற மகளிடமே தகாத முறையில் நடந்து கொண்ட கணவனை மனைவியே சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.