குற்றப்பிரிவு காவலர் pt desk
குற்றம்

சென்னை | பெண்ணிடம் அத்துமீறியதாக குற்றப்பிரிவு காவலர் கைது – நடந்தது என்ன?

பெண்ணிடம் அத்துமீற முயன்ற குற்றப்பிரிவு காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஹோட்டலில் போலீஸ் பிடியில் சிக்கிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண், கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்ற அவர், திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர், ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மற்றும் வாகனத்தை திருடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆவடி குற்றப்பிரிவு காவலர் ஹரிதாஸ் என்பவர் சம்பந்தபட்ட பெண்ணை தொடர்பு கொண்டு திருடு போன வாகனம் கிடைத்து விட்டது, வாகனத்தை பெற்றுக்கொள்ள வருமாறு அழைத்ததோடு, ரூ.15 ஆயிரம் பணமும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண், என்னிடம் பணம் இல்லை என தெரிவித்த நிலையில், பேரம் பேசி 5000 ரூபாய் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை தொடர்பு கொண்ட காவலர் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து தனது அண்ணனிடம் கூறிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அண்ணன், காவலர் ஹரிதாஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹரிதாஸை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் அண்ணன், ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் காவலர் ஹரிதாஸிடம் விசாரணை நடத்தி, அவரை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே குற்றப்பிரிவு காவலர் ஹரிதாஸை ஹோட்டலில் வைத்து கையும் களவுமாய் பிடித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.