குற்றம்

சென்னை: வாகன சோதனையின் போது உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது

webteam

சென்னை தலைமை செயலகம் அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகன ஆவணங்களை கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கியதாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள வார்மெம்மோரியல் பகுதியில் வழக்கம்போல் நேற்றிரவு கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வந்த வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேசனிடம் வாகனத்தின் ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளனர். அப்போது வழக்கறிஞர் என்று சொன்ன பிறகும் ஆவணங்களை கேட்கிறீர்களே? என தகாராறு செய்து உதவி ஆய்வாளர் பிரபாகரனை, வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேசன் தாக்கியுள்ளார்.

இதில், உதவி ஆய்வாளர் பிரபாகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.