குற்றம்

சென்னை: திருமண ஆசைகாட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

kaleelrahman

ஆவடி அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் 14-வயது சிறுமி தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, தாய் தனது மகளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.


இது குறித்து சிறுமியின் தாய் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுபாஷ் (20) என்பவர் சிறுமியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், சுபாஷ் பிடியிலிருந்து சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர், போலீசார் சுபாஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் தலைமையில் போலீசார் மாயமான வழக்கை, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுசெய்து சுபாஷை கைது செய்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.