குற்றம்

சென்னை: கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

kaleelrahman

செங்குன்றத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை அடுத்த செங்குன்றம், பாடியநல்லூரில் வசித்து வரும் தம்பதியின் 17 வயது மகள் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, செங்குன்றம், மொண்டியம்மன் நகர், நேரு தெருவைச் சார்ந்த சந்தோஷ் (18) என்ற எலக்ட்ரிஷியன் மாணவியை கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கல்லூரி மாணவியை, சந்தோஷ் திருமண ஆசை காட்டி ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாணவியை அங்குள்ள நண்பர் வீட்டில் தங்க வைத்த சந்தோஷ், அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, செங்குன்றம் போலீசார், இந்த வழக்கை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

இதன் பின்பு, இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி தலைமையிலான போலீசார், சந்தோஷை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்தோஷை கைது செய்தனர்.