உணவு டெலிவரி செய்வதுபோல் நோட்டமிட்டு அம்பத்தூர் பகுதியில் வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். விலை உயர்ந்த 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் வீடு, கடைகள் முன்பு நிறுத்தியிருந்த பைக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, பொதுமக்களிடம் இருந்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. மேலும், போலீசார் திருடுபோன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, புதூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஓட்டி வந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. மேலும், அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், அவர் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் கங்கை நகர், கிருஷ்ணம்மாள் தெருவைச் சேர்ந்த ஜோசப் (21) என்பதும், இவர் ஏற்கெனவே ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு சப்ளை செய்யும் ஊழியர் என்பதும் தெரியவந்தது, அதேபோல் இவர் உணவு டெலிவரி செய்வதுபோல் அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோட்டமிட்டு இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.