குற்றம்

சென்னை: ஆண் நண்பருடன் தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

kaleelrahman

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்ற 17 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகளான 17 வயது சிறுமி தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டதிற்காக தனது நண்பரான ஸ்வீட்டோஸ் (20) என்பவருடன் நேற்று முன்தினம் கோவளம் பகுதியிலுள்ள ரிசார்டுக்குச் சென்றுள்ளார். அன்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஸ்வீட்டோஸ், குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலக்கி சிறுமியை குடிக்கச் சொன்னதாகவும் அப்போது சுயநினைவின்றி தள்ளாடிய சிறுமியை ஸ்வீட்டோஸ் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை சிறுமி எழுந்து பார்த்தபோது ரிசார்டில் அவர் மட்டும் தனித்து விடப்பட்டதையும், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதையும் உணர்ந்து வீட்டிற்கு வந்து தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஸ்வீட்டோஸ் என்பவரை தேடி வருகின்றனர்.