குற்றம்

“நான் ஐஏஎஸ் அதிகாரி” - போலீசிடம் விசிட்டிங் கார்டை கொடுத்து தானாக சிக்கிய போலி ஆசாமி

kaleelrahman

மதுரவாயலில் போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (27). இவர், கடந்த 1 ஆம் தேதி மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் பகுதியில் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார்மீது அந்த வழியாக வந்த பைக் மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பைக்கில் வந்த 4 பேர் தன்னிடம் வம்பு இழுத்தாக மதுரவாயல் காவல் நிலையத்தில் சுபாஷ் புகார் அளித்ததோடு தான் ஐஏஎஸ் அதிகாரி என கூறியுள்ளார்.

இது தொடர்பாக 4 பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை செய்து வழக்குப் பதிந்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் புகார் தெரிவித்த சுபாஷ் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த விசிட்டிங் கார்டில் ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளர் என்று போடப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுபாஷ் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் சுபாஷ் மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரித்து வருகின்றனர்.