செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை காவல் ஆணையாளரிடம் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதாவது, ”ஆன்லைன் சேவை நடத்தி வந்த நெல்லூரைச் சேர்ந்த வடலபள்ளி விஜயகுமார் என்பவர் தனது மகளுக்கு பாண்டிசேரி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் MBBS சீட் வாங்கித் தருவதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு ரூ.71.63 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால், சீட் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார்” என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வடலபள்ளி விஜயகுமார் என்பவர் MBBS சீட் வாங்கித் தருவதாக கூறி பல பேரை ஏமாற்றியதும், அவர் மீது நெல்லூர் வேதபாளையம் காவல் நிலையம் மற்றும் தர்காமிட்டா காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விஜயகுமார் தலைமறைவாக இருந்து வந்துள்ளது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் கீதாஞ்சலி அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஓங்கேலில் வைத்து விஜயகுமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில், பொது மக்கள் இதுபோன்று மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்யும் நபர்களை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.