குற்றம்

ஒரு செல்போனை பறிக்க நால்வர்; உதவிய find my device அம்சம்” தாம்பரம் அருகே பரபரப்பு சம்பவம்!

webteam

தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்களை மிரட்டி தாக்கிவிட்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மல்லீஸ்வரி நகரில் குமாரசாமி விளையாட்டு மைதானம் உள்ளது. காரில் வந்த கல்லூரி மாணவர்கள் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இருவரும் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் அவர்களை மிரட்டி தாக்கிவிட்டு இரண்டு செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கார்த்திக் தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், செல்போனில் find my device என்ற செல்போன் இருக்குமிடத்தை கண்டறியும் செயலி இருந்தது. அதன் மூலம் செல்போனை பறித்துச் சென்ற நபர்களை கோவளத்தில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் மேடவாக்கத்தைச் சேர்ந்த விவேக் (27), சேலையூரைச் சேர்ந்த விக்னேஷ்(27) மற்றும் பெப் கார்த்திக் (27), புது பெருங்களத்தூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.