குற்றம்

சென்னை: சண்டையை தடுக்கச் சென்ற ஆயுதப்படை காவலர் மீது கற்களை வீசி சரமாரி தாக்குதல்

webteam

ஆலந்தூரில் சண்டையை தடுக்கச் சென்ற ஆயுதப்படை காவலரை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (32), இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு விஜயன், அவரது வீட்டில் இருந்து உறவினர் வாசுதேவன் என்பவருடன் பழவந்தாங்கல் சென்று காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது வாசுதேவனின் செல்போனில் தொடர்பு கொண்ட அவரது நண்பர் தன்னை கண்ணன் காலனி மைதானம் அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் தகராறில் ஈடுபட்டு தாக்குவதாகவும் உடனே வரும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வாசுதேவன் மற்றும் ஆயுதப்படை போலீஸ் விஜயன் ஆகியோர் சென்று அந்த மர்ம கும்பலை தடுக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், விஜயன் மற்றும் வாசுதேவனை சுற்றி வளைத்து சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளனர். இதில், விஜயனுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதை அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சண்டை ஏற்பட்டுள்ளது அதனை தடுக்க முயன்ற போது போலீஸை தாக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போலீசார், அஜித், வினோத், விவேக் ரவிகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.