குற்றம்

சென்னை: ஒரே இரவில் நான்கு இடங்களில் கொள்ளை: போலீசார் விசாரணை

kaleelrahman

சென்னையில் ஒரேநாள் இரவில் வெவ்வேறு இடங்களில் நான்கு வீட்டை உடைத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.


சென்னை முகப்பேர் விஜிபி நகரில் வசித்து வரும் சுதாகர் ரெட்டி என்பவர் கடந்த 10ஆம் தேதி தனது சொந்த ஊரான ஊத்துக்கோட்டைக்கு சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 சவரன் நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அதேபோல் சுதாகர் ரெட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேஷ் என்பவர் வீட்டிலும் நேற்று இரவு கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு கொள்ளைச் சம்பவம் பற்றியும் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையை சேர்ந்தவர் ஜான்சன் இவர் நேற்று முன்தினம் வேளச்சேரியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் காணாமல் போனதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேபோல அயனாவரம் குஞ்சிதபாதம் தெருவைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த வாரம் தனது மாமனார் மறைவிற்காக பட்டாபிராம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இவரது வீட்டில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இந்த சம்பவம் குறித்து பாலாஜி அயனவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.