குற்றம்

சென்னை : அகர்வால் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை - ஹவுஸ்கீப்பர் நேபாளி கைவரிசை

webteam

சென்னையில் பிரபல அகர்வால் ஸ்வீட்ஸ் இனிப்பக உரிமையாளர் வீட்டில் ஹவுஸ்கீப்பிங்க் செய்ய வந்த நேபாளி கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கிருஷ்ணாபுரி பிஷப் கார்டனில் தொழிலதிபரும் பிரபல அகர்வால் இனிப்பக உரிமையாளருமான பன்சிதர் குப்தா குடும்பத்துடன் அவர் வீட்டின் மேல் மாடியில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நேபாளை சேர்ந்த 20 வயதுடைய ராஜன் ( எ) திபேந்திரா ஆஜி என்பவரை வரவழைத்து அவர்களின் வீட்டின் கீழ் தளத்தில் தனியாக அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 10:30 மணியளவில் வழக்கம் போல் பாரிமுனையில் உள்ள தனது ஸ்வீட் ஸ்டால் கடைக்கு பன்சிதர் குப்தா சென்று விட, அதனைத் தொடர்ந்து சுமார் 12.30 மணி அளவில் பன்சிதர் குப்தாவின் தாயார் மஞ்சு குப்தாவும் மேல் தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு பாரிமுனையில் உள்ள அகர்வால் ஸ்வீட் கடைக்கு சென்றுள்ளார்.

பின்பு மாலை சுமார் 5 மணியளவில் பன்சிதர் குப்தா வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ராஜன் ( எ) திபேந்திரா ஆஜி காணாமல் போய் உள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டின் முதல் மாடிக்குச் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் கபோர்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூபாய் 10 லட்சம் பணம், தங்க நாணயங்கள் 10, தங்க மோதிரம் 6, தங்க செயின் 3 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பன்சிதர் குப்தா புகார் தெரிவித்த நிலையில், அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.