குற்றம்

சென்னை: மது வாங்க சென்ற இடத்தில் தகராறு; பாட்டிலால் ஒருவர் குத்திக் கொலை-4 பேர் கைது

webteam

மதுவாங்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை மதுபாட்டிலை உடைத்து குத்திக் கொலை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கண்ணகி நகர், 23வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (31). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று 10,000 ரூபாய் சம்பளம் வாங்கி, அதில் 5000 ரூபாயை அம்மாவிடம் கொடுத்து விட்டு, மீதமுள்ள 5000 ரூபாயை எடுத்துக் கொண்டு நண்பர்களுக்கு மது வாங்கித் தர போவதாக கூறி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில் கண்ணகி நகரை சேர்ந்த முத்துவேல் (31) என்பவரிடம் மது வேண்டும் என்று கேட்டு கண்ணகி நகர் 9வது தெருவிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல், நாங்கள் மது வாங்கித் தருவதாக கூறி பணத்தை தங்களிடம் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் பணத்தை தராமல், முத்துவேலிடமே பணத்தை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன்(எ)காந்தி, மணிகண்டனை அடித்து மது பாட்டிலை உடைத்து மார்பில் குத்திவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்டவரை குத்திக் கொலை செய்த 4 பேரை கைது செய்துள்ளனர்.