குற்றம்

மூதாட்டியிடம் இருந்து 3 சவரன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் இருந்து 3 சவரன் சங்கிலி பறிப்பு

webteam

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மூதாட்டி அணிந்திருந்த மூன்று சவரன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வேலக்கவுண்டனூர் கிராமத்தில் வசிப்பவர் ராஜம்மாள். கணவரை இழந்த 60 வயது மூதாட்டியான இவர், அங்குள்ள தனியார் பள்ளி முன்பாக பெட்டிக்கடை வைத்துள்ளார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கான தின்பண்டங்கள், மாணவர்கள் பயன்பாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து இரண்டு நபர்கள் வந்துள்ளனர். மூதாட்டி ராஜம்மாளிடம் இருவரும் மிக்சர், தண்ணீர் பாக்கெட், டம்ளர் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். 

இதையடுத்து அவர்கள் கேட்ட பொருட்களை எடுத்து கொடுக்கும்போது, திடீரென ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, வேகமாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி உதவிக் கேட்டு கத்தியுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். தங்க நகையை இழந்த மூதாட்டி ராஜம்மாள் ஓமலூர் காவல் நிலையத்தில் நகை திருட்டு குறித்து புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓமலூர் வட்டாரத்தில் தொடரும் திருட்டு மற்றும் தங்க சங்கிலி பறிப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.