குற்றம்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: சிசிடிவி மூலம் சிக்கிய இருவர் கைது

kaleelrahman

இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலி பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலணி பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவர் கடந்த 15 ஆம் தேதி இருகூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராஜாத்தி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தனர்.

இதுகுறித்து ராஜாத்தி கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தைத் தொடர்ந்து சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் போஸ் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருநகண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் இருவர் சங்கிலியை பறித்துச் செல்வது பதிவாகி இருந்தது.

இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், இன்று குற்றதடுப்பு நடவடிக்கையாக மசக்காளி பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கோவை பி.என் புதூரைச் சேர்ந்த தமிழ்செல்வன், மற்றும் திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் ராஜாத்தியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும். அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடமும் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது விசாரனையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 6 சவரன் எடைகொண்ட இரண்டு தங்க சங்கிலிகளையும், சங்கிலி பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.