குற்றம்

மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்!

Sinekadhara

கோவையில் மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எம்.கே. பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மினிமோல் (வயது 43). இவர் சூலூரில் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுசிக் மற்றும் அவருடன் மற்றொரு வாலிபரும் மினிமோலின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து விடும்படி கூறியிருக்கின்றனர்.

அதற்கு மினிமோல் வீட்டில் வைத்து மசாஜ் செய்யமுடியாது. எனவே மசாஜ் சென்டருக்கு வாருங்கள் செய்து விடுகிறேன் எனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அந்த வாலிபர்கள் செல்ல மறுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மினிமோலின் தலை, கை ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளனர். இதில் வலி தாங்கமுடியாமல் அவர் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மினிமோலை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மசாஜ் செய்யமறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.