bike theft
bike theft file image
குற்றம்

சொகுசு பைக்கை தீக்குச்சியை வைத்து நூதன முறையில் திருடிச் சென்ற நபர்கள்!

யுவபுருஷ்

சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி, சிப்பாய் லைன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ரஞ்சித் என்பவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்த பைக்கை தள்ளிச் சென்றதும் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த வயரை பிடுங்கிவிட்டு ஸ்டார்ட் செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. வீடியோவின்படி அந்நபர்கள் வலுவாக இழுத்துப் பார்த்தும் பைக் வயர்களை பிடுங்க முடியாததால், சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் வயரை பிடித்து இழுக்க ஆரம்பித்துள்ளனர்.

அப்போதும் வயர் வராததால் சமயோஜிதமாக யோசித்த ஒரு நபர் பாக்கெட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்து, வயரை சூடாக்கி அதனை பிடுங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வயரை இழுத்து நூதன முறையில் பைக்கை ஸ்டார்ட் செய்ய வைத்து சர்வ சாதாரணமாக ஓட்டிச்சென்றுள்ளனர். மெக்கானிக்கான ரஞ்சித் தனது விலை உயர்ந்த பைக்கை பாதுகாப்பாக வைப்பதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு, வயர்களை பாதுகாப்பான முறையில் வைத்துள்ளார். எவ்வளவு இழுத்தும் வராத வகையில் இருந்த வயர்களை, தீக்குச்சிகளை வைத்து திருடர்கள் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசில் ரஞ்சித் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.