குற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்தது சிபிஐ காவல்துறை

நிவேதா ஜெகராஜா
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ. போலீஸார் தரப்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் துன்புறுதல் செய்து செல்போனில் படம் எடுத்து மிரட்டுவதாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்த் ஆகிய நால்வறையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு CBCID யிடம் விசாரணைக்காக கை மாறியது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மணிவண்ணன் என்பவர் கோவை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தனக்கு தொடர்புள்ளதாக ஆஜர் ஆனார். பின்னர் இந்த வழக்கு CBI க்கு மாறிய பின்பு விசாரணயை தொடர்ந்த அதிகாரிகள் ஹீரோன்பௌள் மற்றும் பைக் பாபு என இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு முன்பு (மார்ச் 2021), இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி அதிமுகவின் மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் என்பவரை CBI போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொன்டு வந்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஏற்கெனவே இந்த வழக்கில் கைதாகியுள்ள சதீஷ் குமார் என்பவரின் நண்பரான பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்பவரை சி.பி.ஐ. போலீசார், பொள்ளாச்சி பகுதியில் வைத்து தற்போது கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த பாலியல் வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஒன்பதாவதாக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதும் இந்த பாலியல் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.