குற்றம்

தேசிய பங்குச் சந்தை முறைகேடு புகார்: முன்னாள் செயல் இயக்குநர் ஆனந்த் சுப்ரமணியம் கைது

நிவேதா ஜெகராஜா

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் செயல் இயக்குநர் ஆனந்த் சுப்ரமணியத்தை சிபிஐ கைது செய்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகராகவும் சந்தையின் செயல் இயக்குநராகவும் இருந்தவர் ஆனந்த் சுப்ரமணியம். தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக 2016ஆம் ஆண்டு வரை இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையைச் சேர்ந்த யோகி ஒருவரின் யோசனையைக் கேட்டு முடிவுகளை எடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆனந்த் சுப்ரமணியத்தை இந்த முக்கிய பதவியில் நியமித்ததாக கூறப்படுகிறது.

அப்போது முதல் சந்தை சார்ந்த முக்கிய முடிவுகளில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆனந்த் சுப்ரமணியம் அழுத்தம் கொடுத்து எடுக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, சென்னையில் உள்ள ஆனந்த் சுப்ரமணியம் தொடர்புடைய இடங்களில் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஆனந்த் சுப்ரமணியத்தை நேற்றிரவு சென்னையில் சிபிஐ கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.