குற்றம்

பொள்ளாச்சி: காதலியை பார்க்கச் சென்ற பட்டியலின இளைஞரை தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு

kaleelrahman

பொள்ளாச்சி அருகே காதலியை பார்க்கச் சென்ற பட்டியலின இளைஞரை தோட்டத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஹரிஹர சுதாகர் அதே பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அதே தோட்டத்தில் பணிபுரியும் பொன்னமராவதியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணுடன் ஹரிஹரனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஹரிஹரன் அங்கு பணிக்குச் செல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததைக் கண்ட தோட்டத்து உரிமையாளர் ஹரிஹரனின் உறவினர்களிடம் கூறி இனிமேல் பேசக்கூடாது என மிரட்டி வந்துள்ளனர். ஆனால், மீண்டும் இருவரும் தொலைபேசியில் பேசியதால் ஹரிஹர சுதாகரனை தனது தோட்டத்திற்கு அழைத்து வருமாறு தோட்ட உரிமையாளர் ராமசாமி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது காதலியை பார்க்க ஹரிஹர சுதாகரன் ராமசாமியின் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தோட்டத்து கணக்கர் கேசவன் மற்றும் தொழிலாளி காளிமுத்து, ராமன் மற்றும் அங்கு பணிபுரிந்த வடமாநில இளைஞர்கள் இருவரும் ராமசாமியுடன் சேர்ந்து, ஹரிஹர சுதாகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மயங்கிய ஹரிஹர சுதாகரனை அங்கிருந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடலில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த ஹரிஹர சுதாகரனை விசாரித்த அவரது தந்தை குமார், ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராமசாமி மற்றும் கேசவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.