குற்றம்

லிஃப்ட் கொடுப்பது போல நடித்து திருட்டு... கையும் களவுமாக பிடித்த காவல்துறை!

webteam

நள்ளிரவில் லிப்ட் கேட்ட நபரை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கி செல்போன் பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடியை அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜூட் ஆண்டனி நியூரோ (40). டிரைவராக பணியாற்றி வரும் இவர், பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக வேல்டெக் ஜங்ஷன் அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் லிப்ட் கேட்டுள்ளார். உடனே அந்த மர்ம நபர் லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று புதிய கன்னியம்மன் நகர் பகுதியில் இறக்கிவிட்டு, அவரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஜூட் ஆண்டனி ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், விசாரணைக்காக கன்னியம்மன் நகர் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிரில் வந்த மர்ம நபரை ஜூட் ஆண்டனி நியூரோ அடையாளம் கண்டு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து எதிரே வந்த நபரை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த நபர் ஆவடி அடுத்த வீராபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (24) என்பது தெரியவந்தது. இவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.