குற்றம்

தன்னுடைய பார்ட்னர்களாலேயே கடத்தப்பட்ட பிசினஸ் மேன்! 55 லட்சத்திற்காக அரங்கேறிய கடத்தல்!

Rishan Vengai

டெல்லியில் தன்னுடைய பிசினஸ் கூட்டாளிகளாலேயே கடத்தப்பட்ட தொழிலதிபர், 6 மணி நேரத்தில் சேஷிங் செய்து கண்டுபிடிக்கப்பட்டார்.

தலைநகர் டெல்லியின் வடக்கு காவல் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னுடைய மைத்துனர் சயத் தரிக் என்பவரை தேசிய தலைநகரின் காஷ்மீர் கேட்டிலிருந்து யாரோ கடத்தி சென்றுவிட்டதாக எச்சரிக்கை செய்தார்.

தகவல் கிடைத்ததன் அடிப்படையில் உடனடியாக விசாரணையை தொடங்கிய டெல்லி காவல்துறையினர், யாரோ இரண்டு பேர் தரிக்கை கட்டாயப்படுத்தி மாருதி ஸ்விப்டில் கடத்திச்சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர் சிசிடிவியின் உதவியோடு விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர், கார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். தொடர்ந்து காரானது ஜிடி கர்னால் சாலையில் பயணித்து பஞ்சாப் நோக்கி செல்வதை அறிந்த டெல்லி போலீசார், பஞ்சாப் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் தொடர் கூட்டுமுயற்சியின் காரணமாக காரை வலைத்து பிடித்த காவல்துறையினர், சயத் தரிக்கை கடத்திச் சென்ற இரண்டு பேரை கைது செய்தனர். கைது செய்து விசாரனை செய்ததில் கடத்திச்சென்றது நிஷார் மற்றும் இம்தியாஸ் அகமது என்பதும், அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காமில் வசித்துவருவதும், இருவரும் சயத் தரிக் உடன் சேர்ந்து பிசினஸ் செய்து வருவதும் தெரியவந்தது. பிசினஸில் தரிக் தரவேண்டிய 55 லட்சம் ரூபாய்க்காக தான் இந்த கடத்தல் நடத்தப்பட்டதாகவும், தாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள் எனக்கூறி காரை வாடகைக்கு எடுத்து கடத்திச்சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.