குற்றம்

தஞ்சை: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பச்சிளம் குழந்தை படுகொலை

நிவேதா ஜெகராஜா

தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதில் சந்தேகத்துக்கு இடமாக, கர்ப்பிணியான பெண் ஒருவர் மாஸ்க் மற்றும் தலையில் துணிபோர்த்தியபடி தன் அடையாளங்களை மறைத்துக்கொண்டு கழிவறைக்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பெண் பற்றிய விசாரணையை விரைவுபடுத்தியுள்ளனர் காவல்துறையினர். அப்பெண் சுமார் அரைமணி நேரம் கழித்துதான் கழிவறையிலிருந்து வெளியேவருகிறார் என்பதால் அவர்மீது சந்தேகம் வலுத்துவருகிறது. அடுத்தடுத்தகட்ட விசாரணையிலேயே நடந்தது என்ன என்பது முழுமையாக தெரியும் என்கின்றனர் காவல்துறையினரும் மருத்துவமனை நிர்வாகமும்.

- காதர் உசேன்.