கோவை அருகே அண்ணனே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட தங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மகளும், டிப்ளமோ படிக்கும் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மகள் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இத்தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரியவந்ததை அடுத்து அந்தச் சிறுமியை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க மறுத்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உடன் பிறந்த சகோதரர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து செல்வபுரம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அந்தச் சிறுமியின் அண்ணனை தேடி வருகின்றனர்.