தங்கையின் இறப்பில் மர்மம் இருப்பதால் மீண்டும் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் சகோதரர் சுடுகாட்டில் காத்திருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24-ஆம் தேதி சசிகலா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அன்றே அடக்கம் செய்தனர்.
அதன் மறுநாள் தன் தங்கையின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அவரது அண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த திமுகவின் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் தன் தங்கையை கொலைசெய்து விட்டு நாடகமாடியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் வீடியோவை இணையதளங்களில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டி வந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சமீபத்தில் அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்ததாகவும் அதனாலேயே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் எனவும் பெண்ணின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் போலீசார் திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் மீது தற்கொலை செய்ய தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பெண்ணின் சகோதரர் சுடுகாட்டில் சசிகலா புதைக்கப்பட்ட இடத்திலேயே இருந்து வருகிறார். மீண்டும் பிரேத பரிசோதனை செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என சுடுகாட்டில் காத்து இருக்கிறார்