குற்றம்

பூட்டியிருந்த வீடுகளை உடைத்து 45 சவரன் நகை ரூ.60 ஆயிரம் பணம் கொள்ளை: 5 பேர் கைது

kaleelrahman


ராமநாதபுரம் அருகே பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளை. கொள்ளையர்கள் 5 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சீனிமுகமது, அகமது அலி ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டியிருந்த சீனி முகம்மது வீட்டின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும், அகமது அலி வீட்டில் புகுந்து 45 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கேணிக்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தி மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பெயரில் கொள்ளையர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்ஐ ராமச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா, மணிகண்டன், ரெங்கநாதன் ஆகியோரை முதல் கட்டமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடாந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.