குற்றம்

மகளின் காதலால் எழுந்த பிரச்னை : காதலனின் தந்தை கொலை

webteam

மகளுடைய காதலனின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (48). கார் டிரைவராக இருந்தார். இவரது மகன் ஆகாஷ்(20). இதேபோல் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் முக்காடுகுமார்(40). இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தர்ஷினி. திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

(பாம்பு நாகராஜன்)

இந்நிலையில், ஆகாஷும் தர்ஷினியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தர்ஷினியின் தந்தை முக்காடு குமார், ஆகாஷ் மற்றும் அவரது தந்தையை கண்டித்துள்ளார். ஆனால் தர்ஷினியிடம் பேசுவதை ஆகாஷ் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முக்காடுகுமார், அவரது நண்பர் பாம்பு நாகராஜூடன் சேர்ந்து சாலையில் நடந்து சென்றுகொண்டிர்ந்த பார்த்தீபனை விரட்டிச் சென்று கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடினர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பார்த்தீபனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடி இருவரையும் லால்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.