குற்றம்

சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - விழுப்புரம் இளைஞர் கைது

webteam

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை தேனாம்பேட்டை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடுப் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வர். இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனச் சொல்லப்படுகிறது. முன்னதாக பிரபலங்கள் பலருக்கு இவர் வெடி குண்டு மிரட்டல் விடுத்த நிலையில், அவரை மரக்காணம் காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்து  எச்சரித்து அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில் இவர் அண்மையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு  ஆழ்வார்பேட்டையில் உள்ள சூர்யாவின் அலுவலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக மோப்ப நாய்களுடன் அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், அலுவலத்தை சோதனைக்கு உட்படுத்தினர். சோதனையின் முடிவில்  அங்கு வெடிகுண்டு இல்லை என்பதும் தகவல் வதந்தி என்பதும்  தெரிய வந்தது. மேலும் தற்போது அந்த கட்டிடத்தில் சூர்யாவின் அலுவலகம் இயங்கவில்லை என்றும், தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வந்த நிலையில், இன்று புதுச்சேரி காலாப்பட்டு காவல் துறைனர் புவனேஷ்வரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்துள்ள தேனாம்பேட்டை காவல்துறையினர் அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.