குற்றம்

பெங்களூரூ டூ கடலூர்: வாகன சோதனையில் சிக்கிய 16 மூட்டை குட்கா – 3 பேர் கைது

webteam

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் முன்பு காவல் துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மூட்டைகளை ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், 16 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பாலாஜி (32) வடலூரைச் சேர்ந்த விக்னேஷ் (22) மகாராஜன் (27) உட்பட 3 பேரை கைது செய்தனர். இதையடுத்து கடத்திவரப்பட்ட 16 மூட்டை குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சில்லறையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.