குற்றம்

பெற்ற தாயை தீ வைத்து கொளுத்திய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

webteam

பெங்களூரில் குடிக்க காசு தராததால் பெற்ற தாயை தீ வைத்து கொளுத்திய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூர் சதாசிவம் நகரை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத் - பாரதி தம்பதியினர். இவர்களுக்கு 23 வயதில் உத்தம் குமார் என்ற மகன் உள்ளான். குடிபோதைக்கு அடிமையான உத்தம் குமார் குடிக்க அவனின் அம்மா பாரதியிடம் அடிக்கடி காசு வாங்குவது வழக்கம்.

இந்நிலையில், தன் அம்மாவிடம் குடிக்க காசு கேட்டுள்ளான் உத்தம்குமார். ஆனால் பாரதி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உத்தம் குமார் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து பாரதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பாரதியின் கணவர் மஞ்சுநாத் உறவினர்களின் உதவியோடு தீயை அணைத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாரதியை அனுமதித்தார். பாரதி கை, கால்கள், நெஞ்சு பகுதியில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து மஞ்சுநாத் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ”குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது மகன் உத்தம் குமார் என்னிடமும் என் மனைவி பாரதியிடம் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும். பணம் கேட்டு தராத என் மனைவி பாரதியை தீ வைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அவன்மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான உத்தம் குமாரை தேடி வருகின்றனர்.