இருவேறு பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூபாய் 64 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தின் முதன்மை வங்கியாக உள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இவ்வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், விவசாய இயந்திரங்கள் வாங்க கடன் என பல்வேறு பிரிவுகளில் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் அசாவீரன் குடிகாடு கிளையில் கடந்த 2011-12 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்காமலேயே, கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 40 லட்சம் மோசடி செய்தது கண்டறியப்பட்டு அப்போதைய வங்கிக் கிளையின் மேலாளர் புகார் செய்திருந்தார். இதன்பேரில் அசாவீரன் குடிகாடு கிளை கிராம கடன் வசூல் அலுவலர் பிரதீப், வங்கி மேலாளர் ராஜேந்திரன், எறையூரில் உள்ள அரசு சர்க்கரை ஆலையின் அலுவலர் மற்றும் வங்கியின் கிளர்க் மதன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல வரதராஜன்பேட்டை கிளையில் 30 விவசாயிகளுக்கு 24 லட்சம் கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட கிராம கடன் வசூல் அலுவலர் பழனிசாமி மீதும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.