குற்றம்

ஆவடி: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

webteam

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகன், தாய், அக்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்து 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் (34) அவரது தாயார் விஜயா (65) அக்கா லலிதா (36) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெங்கடேசனுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணம் ஆகி மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் வெங்கடேசனின் அக்கா லலிதா, வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்ணின் 16 வயது மகளை தனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்க பெண் கேட்டுள்ளார். இதற்கு பெண்ணின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றபோது வீட்டில் தனிமையாக இருந்த சிறுமியை மிரட்டிய வெங்கடேசன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல் பலமுறை வெங்கடேசன் சிறுமையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது லலிதா தனது ஆண் நண்பர்கள் வெங்கப்பன், கிரி, பாலாஜி ஆகிய மூவரிடம் ரூ.3,500 பணத்தை பெற்றுக்கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தாய் தனது மகளை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் லதா, புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளான வெங்கடேசன், அவரது தாய் விஜயா, அக்கா லலிதா, அக்கா லலிதாவின் ஆண் நண்பர் வெங்கப்பா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிரி, பாலாஜி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாய், மகன், அக்கா உள்பட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.