குற்றம்

‘பேங்ல இருந்து பேசுறோம்; ஏடிஎம் நம்பர் சொல்லுங்க’- 50 லட்சம் வரை மோசடி செய்தவர் கைது..!

Rasus

பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களிடம் ஏடிஎம் கார்டு நம்பர்களை வாங்கி சுமார் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த இளைஞரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பலரது மொபைல் எண்ணிற்கும், தங்கள் வங்கி ஏடிஎம் கார்டு லாக்காகி விட்டது எனக்கூறி அவர்களின் ஏடிஎம்மில் இருந்து திருட்டுத்தனமாக பணம் எடுக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இதுதொடர்பாக சென்னை சைபர்கிரைம் போலீசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. எனவே இந்த புகார்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததோடு, மோசடி கும்பலையும் வலைவீசி தேடிவந்தனர்.

இதனிடையே நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த செல்வம் என்பவர் மகன் வளன் ராஜ்குமார், அதே பகுதியில் ஆன்லைன் பிசினஸ் செய்வதாகக்கூறி பல்வேறு விளம்பரங்கள் செய்து தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர் போனில் பேசியவாறே, மக்களிடம் ஏடிஎம் கார்டு நம்பர்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனால் இவரை சென்னை மைலாப்பூர் சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மாற்று குரலில் அதாவது பெண்கள்போல் பேசியும் பலரிடம் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கையும் சைபர்கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர். அந்த கணக்கில் சுமார் ரூபாய் 8 லட்சம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரை தொடர்ந்து இதில் சம்பந்தபட்ட மேலும் சிலரை சைபர்கிரைம் போலீசார் விசாரித்தும் தேடியும் வருகின்றனர்.