குற்றம்

விடுதிக்குள் நிர்வாணமாய் புகுந்த இளைஞர் - நர்சின் முகத்தை கடித்து குதறிய கொடூரம்!

webteam

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் புகுந்த இளைஞர் செவிலியரை பலவந்தப்படுத்தி முகத்தில் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மருத்துவர்கள் 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில் நேற்று இரவு ஆளில்லாத நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தனது உடைகளை அனைத்தையும் கழட்டி நிர்வாணமாக அங்கேயே சுற்றி வந்துள்ளார்.

அப்போது தங்கும் விடுதியில் இருந்து ஒரு செவிலியர் வெளியே வருவதைக் கண்ட அந்த இளைஞர் அந்த செவிலியர் மீது பாய்ந்து பலவந்தமாக அந்த செவிலியர் முகத்தில் அந்த மர்ம நபர் கடித்து குதறி உள்ளார். இதனால் அலறித் துடித்த செவிலியரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் விடுதிக்குள் சென்று செவிலியரின் உடையை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அந்த இளைஞர் பாளையம்பட்டி சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் காயம்பட்ட அந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இரவு நேரங்களில் இரண்டு செவிலியர் மட்டுமே பணிபுரிவதால் போதிய பாதுகாப்பில்லை என மக்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.