குற்றம்

ஓடும் ரயிலில் வடமாநிலத்தவரை தாக்கியவர் கைது

ஓடும் ரயிலில் வடமாநிலத்தவரை தாக்கியவர் கைது

webteam

சமீபகாலமாக வட மாநிலவத்தவரை தாக்கும் வீடியோ அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரங்களுக்கு முன். ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கிய மகிமை தாஸ் என்ற நபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தமிழ் பேசக்கூடிய நபர் ஒருவர் தாக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக அந்த வீடியோவில் நீங்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள், நாங்கள் தான் இருக்கிறோமே, நாங்க எல்லா வேலையும் செய்து கொள்வோம் என வடமாநில இளைஞர்களை தாக்கி தகாத வார்த்தையால் அந்த நபர் பேசி இருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு ஆபாசமாக பேசுதல்,சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் வடமாநில இளைஞர்களை தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்தை தமிழக ரயில்வே காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் வைரலான வீடியோ கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுக்கப்பட்டது என ரயில்வே காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் வட மாநில இளைஞரை தாக்கிய மகிமை தாஸ் என்ற நபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.