குற்றம்

அரியலூர்: கர்ப்பமாக்கிய சிறுமியை குழந்தை திருமணம் செய்த மாப்பிள்ளை கைது

அரியலூர்: கர்ப்பமாக்கிய சிறுமியை குழந்தை திருமணம் செய்த மாப்பிள்ளை கைது

kaleelrahman

அரியலூர் அருகே குழந்தை திருமணம் செய்து வைத்த சிறுமியின் அம்மா உள்ளிட்ட மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில், திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கல ராஜ். இவர், புதுப்பாளையம் கிராமத்தில் கூலி வேலைக்காக சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்து தனது அம்மா செல்வியிடம் சிறுமி கூறியதையடுத்து உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அடைக்கல ராஜ்க்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், சிறுமி பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமிக்கு 15 வயது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர் கார்த்திகேயன், சிறுமியிடம் விசாரணை செய்தார். இதையடுத்து சிறுமியை குழந்தை திருமணம் செய்ததாக அடைக்கலராஜ், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அடைக்கலராஜின் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் அம்மா செல்வி ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அடைக்கலராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவான அடைக்கலராஜின் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் அம்மா செல்வி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.