குற்றம்

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்து நெரித்து கொலை... போதை கணவர் கைது

kaleelrahman

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்கின்ற பிரியதர்ஷினிக்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது.

இந்நிலையில் தமிழரசன் தினம்தோறும் குடித்து விட்டு குடிபோதையில் மனைவி பிரியதர்ஷினியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இன்று மதியம் ஏற்பட்ட தகராறில் தமிழரசன் மனைவியின் கழுத்தை நெரித்து சுவற்றில் வைத்து அழுத்தியததாக கூறப்படுகிறது.

இதில் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 2 மாதத்தில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.