குற்றம்

பைக் திருட்டில் ஈடுபட்ட 20 வயது இளைஞர்... பிடிபட்ட 10 இருசக்கர வாகனங்கள்!

webteam

ஆரணி அருகே 20 வயதான இளைஞரிடம் இருந்து, திருடப்பட்ட 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் காவல்துறை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடமாதிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (20) என்ற இளைஞர், திருமண மண்டபத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் நடைபெறாத நாட்களில் சக்திவேல், மற்றவர்கள் நிறுத்தி வைத்த இரு சக்கர வாகனங்களை கள்ள சாவி போட்டு திருடி எடுத்து செல்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆரணி நகர காவல் துறையினருக்கு பொது மக்களிடமிருந்து தங்களுடைய இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக அடிக்கடி வந்த புகார் வந்துள்ளது. அதனையடுத்து ஆரணி அருகே ஹவுசிங் போர்டு புறவழி குடியிருப்பு சாலையில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன சோதனையின் போது, அந்த வழியாக வந்த 20 வயதையுடைய சக்திவேல் என்ற இளைஞரை, சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்ததில், சக்திவேல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

பின்னர் சக்திவேலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முறையாக விசாரனை செய்ததில், அவரிடமிருந்து திருடிய 10 இரு சக்கர வாகனங்களை நகர காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து, சக்திவேல் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.