குற்றம்

மீண்டும் துணிவு பட பாணியில் கொள்ளை முயற்சியா! சோகத்தில் முடிந்த கல்லூரி மாணவரின் செயல்!

webteam

தாராபுரம் அருகே துணிவு பட பாணியில் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில், ஊழியர்கள் வழக்கம் போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், திடீரென வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியை காட்டி வங்கி அதிகாரிகளை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் வங்கியில் இருந்த பொதுமக்கள் விரைவாக செயல்பட்டு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்கியம் போலீசார், இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவரிடம் இருந்தது பொம்மை துப்பாக்கி, மற்றும் போலி வெடிகுண்டுகள் என்பதும் தெரியவந்தது. இதைடுத்து அந்த இளைஞர் அலங்கியம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பதும் தனியார் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் அஜித் நடித்த துணிவு படத்தை பார்த்து அதில் வருவது போல் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வங்கி மேலாளர் சுகந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திரைப்படத்தைப் பார்த்து கல்லூரி மாணவர் ஒருவர் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அலங்கியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.