குற்றம்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ’எய்ட்ஸ் நோயாளி’ இளைஞர் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த எய்ட்ஸ் நோயாளி ரதீஸ் என்பவரை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (22). ஆட்டோ டிரைவரான இவர் 11ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பது போல் நடித்து ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஆட்டோ டிரைவரையும் அவர் அழைத்துச் சென்ற மாணவியையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவிலில் அவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்த போது போலீசார் ஆட்டோ டிரைவர் ரதீஸை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவருடன் இருந்த மாணவியை மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ரதீஸிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் எய்ட்ஸ் நோயாளி என அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவுசெய்த அனைத்து மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.