குற்றம்

”விமானப் படையில் வேலை வாங்கித் தர்றேன்” - 70 லட்சத்தை இழந்த இளைஞர்.. மோசடி நபர் கைது

webteam

மத்திய பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் ஆவடி மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் புதுதெரு, அலமேலு மங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலு (52). நிர்மலா தேவி (40) தம்பதியர். இவர்களுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த தனசேகரன் (35) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்திய விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாக தம்பதியர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய தனசேகரன் லட்சக் கணக்கில் பணத்தை வேலுவிடம் தந்துள்ளார். ஆனால் வேலு, வேலை வாங்கித் தராமல் தொடர்ந்து இழுத்தடித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தனசேகரன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீஸார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த வேலுவை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வேலுவை வேலூரில் வைத்து கைது செய்த போலீஸார், அவரை ஆவடி ஆணையரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனசேகர் உட்பட பலரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் வரை ஏமாற்றியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி நிர்மலா தேவியை தேடி வருகின்றனர்.