குற்றம்

அரிவாளால் கேக் வெட்டிய ரவுடி பினு மீண்டும் கைது

webteam

அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி பினு காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ர‌வரி மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி‌ பினு கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனிப்படை காவல்துறையினர் ரவுடி பினுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 3 மாதங்களாக வேலூர் சிறையில் இருந்த பினு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் காவல்நிலையத்தி‌ல் ஆஜராகி கையெழுத்திடாத்தால் ஜாமீன் மனுவை ரத்து செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் ரவுடி பினு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் எண்ணூரில் செந்தில்குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக ரவுடி ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ரமேஷிடம் நடத்திய விசாரணையில் கள்ளத்துப்பாக்கியை ரவுடி பினு வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை புழலில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி பினுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஜாமீனில் வெளியே வந்த பினு தலைமறைவாகி கடந்த ஓராண்டாக மறைவிடத்தில் பதுங்கியிருந்தார். இந்நிலையில் ரவுடி பினு தற்போது மீண்டும் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.