விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் விஜய நல்லதம்பி. இவரது அண்ணன் ரவிச்சந்திரன், அதிமுகவின் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரவிச்சந்திரனின் மனைவி வள்ளி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 முதல் 2019 வரை துணை வேந்தராக பணியாற்றி வந்துள்ளார்.
ரவிச்சந்திரன்,
* கொடைக்கானலைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி சத்யாவிடம் கணினி உதவிப் பேராசிரியர் பணிக்காக ரூ.15 லட்சமும்,
* ஸ்ரீஜா என்பவரிடம் வேதியியல் துறையில் உதவிப் பேராசிரியர் பணிக்காக ரூ.20 லட்சமும்,
* சத்யா என்பவரிடம் கணிதத் துறையில் உதவிப் பேராசிரியர் பணிக்காக ரூ.25 லட்சமும்,
* ஜெனிபர் என்பவரிடம் எழுத்தர் பணிக்காக ரூ.4 லட்சமும்,
* சந்திரா என்பவரிடம் ரூ.5 லட்சமும்,
* கிருஷ்ணம்மாள் என்பவரிடம் ரூ.5 லட்சமும்,
* சுகன்யா என்பவரிடம் ரூ.5 லட்சமும்,
* கீர்த்தனா என்பவரிடம் ரூ.4 லட்சமும்
வாங்கியுள்ளார் என புகார் எழுந்துள்ளது. இப்படி இன்னும் மொத்தம் 20 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1 கோடியே 80 லட்சத்தை ரவிச்சந்திரனிடம், கொடைக்கானலைச் சேர்ந்த விஜய் என்பவர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பணத்தை பெற்றபின் யாருக்கும் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பிக் கொடுக்காமலும் இருந்ததால் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மீதும், அவரது மனைவி வள்ளி மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் புகார் அளித்தார்.
இந்த புகாரை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பணம் கொடுத்ததாகக் கூறப்படும் கொடைக்கானலைச் சேர்ந்த விஜய், “பணத்தை ரவிச்சந்திரனிடம் கொடுக்கவில்லை. விஜய நல்லதம்பியிடம் தான் கொடுத்தேன்” என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பணத்தை பெற்றுக் கொண்டதுடன், போலியாக தனது அண்ணன் மீது புகார் அளிக்க வைத்துள்ளார் என விஜய நல்லதம்பியை குற்றப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.