அதிமுக முன்னாள் கவுன்சிலர் அரசு அலுவலகத்தில் இன்று வெட்டிக்கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலரான மகேந்திரன், வேலை விஷயமாக இன்று வந்தார். அப்போது அங்கு வந்த மணிமாறன் என்பவர் அவரிடம் ஏதோ கேட்டாராம். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மணிமாறன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேந்திரனை, வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உள்ளேயே சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில் நிலைகுலைந்த மகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அடுத்த சில நிமிடங்களிலே துடிதுடித்து பலியானார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அணைகட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மகேந்திரனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒப்பந்த பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் உள்ளேயே முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.